Tuesday, 10 June 2014

பட்டி நாய்

''பட்டி நாய் என்று ஒருவகை நாய் இனம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இந்த இன நாய்கள் எங்கு கிடைக்கும்?''
- ஆர். குணசீலன், நாகப்பட்டினம்.
நாட்டு இன நாய்கள் பற்றி ஆய்வு செய்து வருபவரான ஈரோடு பகுதியைச் சேர்ந்த பொன். தீபங்கர் பதில் சொல்கிறார்.
மேலும் தகவல்களுக்கு:https://www.facebook.com/groups/Livestock.TN/permalink/405004226297673/
''ஆட்டுப் பட்டி, மாட்டுப் பட்டிகளுக்கு காவல் இருந்த நாய்களைத்தான், 'பட்டி நாய்’ என்று சொல்கிறோம். ஒவ்வொரு பட்டியிலும் நூற்றுக்கணக்கான, ஆடு, மாடுகள் இருக்கும். கால்நடைகளுக்குத் தீங்கு ஏற்படாமல் பாதுகாக்கும் வேலையைப் பட்டி நாய்கள் செய்யும். அதாவது, பட்டிக்குள் பாம்பு, பூரான்... போன்ற விஷ ஜந்துக்கள் இருந்தால், உடனே குரைக்கும். இதனால், ஆடு, மாடுகள் உஷராகிவிடும். பட்டிக்குள் திருடன் நுழைந்துவிட்டால், அதிகமாகக் குரைத்து சப்தம் எழுப்பும். இரவு நேரத்தில், மாடு கன்று போட்டால், உடனே பட்டி நாய் அங்கு காவலுக்கு நிற்கும். காரணம், ஆள் இல்லாத நேரத்தில், இளம் கன்றுகளை நரிகள் தூக்கிச் சென்றுவிடும். இதைத் தடுக்கவே நாய் காவலுக்கு நிற்கும். எக்காரணம் கொண்டும், பட்டியில் உள்ள கால்நடைகளைக் கடிக்காது. தன் உயிரைக் கொடுத்து, பட்டியில் உள்ள கால்நடைகளையும், மனிதர்களையும் காக்கும். இதனால், மாட்டுப் பொங்கல் அன்று பட்டி நாய்களையும், குளிப்பாட்டி, மாலை போட்டு ஒரு படையல் வைப்பது வழக்கம்.
இப்போது, பட்டிகள் குறைந்துவிட்டன. இதனால், பட்டி நாய்கள் தெருவுக்கு வந்துவிட்டன. உங்கள் பகுதியில் உள்ள தெரு நாய் குட்டிப் போடும்போது, அதை எடுத்து வளர்க்கலாம். வெளிநாட்டு இன நாய்களைவிட, இந்த நாய்கள்தான் வளர்ப்பவர்கள் மீது அதிக விசுவாசம் கொண்டவை. உடலில் ஏதாவது, கோளாறு என்றால், மூலிகையை உண்டு தானே குணப்படுத்திக் கொள்ளும். உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் கொண்டவை, இந்த நாய்கள்தான். இறக்கப் போகிறோம் என்று உணர்ந்தால், வெளி இடங்களுக்கு சென்று உயிரை விடும். இதற்கு காரணம், தன்னை வளர்த்தவர்கள் துன்பப்படக்கூடாது என்ற எண்ணம்தான். இவ்வளவு சிறப்புகள் கொண்ட நாய் இனத்தை, நாம் 'தெரு நாய்'களாக்கித் துரத்திக் கொண்டிருக்கிறோம்.''
தொடர்புக்கு,
தொலைபேசி: 0424-2274700

No comments:

Post a Comment